Sunday, March 28, 2010

வணக்கம் தமிழா!

என் அன்பான தோழமைகளே! என் பாசமிகு தமிழ் சமூகமே! தமிழும் தமிழ் சார்ந்த வலைமனையாக இதை நான் பதிவு செய்வதில் பேருவகை அடைகிறேன். இந்த மனை, யான் எழுதித் தொகுத்து வெளியிட்ட ஒரு சிறிய கவிதைத் தொகுப்பான "ஒரு கருவறையின் அறுவடை" என்ற நூலில் உள்ள கவிதைகளின் மின்பதிவு மனை. இதை நான் உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன்.

கவிதைகள், ஒவ்வொரு மனிதனுடைய உணர்வுகளின் வடிகால். கவிதைகள் மனிதனை வளர்க்கின்றன; கவிதைகள் மனிதனை சிந்திக்கவைக்கின்றன; அவை மனிதனை மனிதனாக்குகின்றன...

என்னை அவ்வப்போது கவிதைகள் எழுதவைக்க காரணமாயிருந்த அனைவருக்கும்... அனைத்துக்கும்... என் மனமார்ந்த நன்றிகள் -

முத்தமிழ் மன்றம்
(மூகாம்பிகை பொறியியல் கல்லூரி)
திருச்சி வானொலி நிலையம்
குருகுலத் தென்றல் - மாத இதழ்
புதிய மாற்றம் - மாத இதழ்


"கவிதைகள் எழுத... எழுத...
என்னை விட்டுச் செல்கிறது மரணம்"

சிநேகத்துடன்,
விமலன்

Saturday, March 27, 2010

                     
நான் எழுதிய சிறிய கவிதைத்  தொகுப்பான   "ஒரு கருவறையின் அறுவடை" என்ற பதிவிலிருந்து ஒரு  சில கவிதைகள் இங்கே சிதறல்களாய்...

இவற்றுள் சில கவிதைகள் உங்களை சிந்திக்க வைக்கும், சில உங்களை பிரதிபலிக்கும், வேறு சில உங்கள் உணர்வுகளை புரட்ட வல்லும்...!

எதுவாக இருப்பினும் சரி, உங்கள் கருத்துகளை இப்பகுதியில் நீங்கள் பதிவு செய்யுங்கள் !

ஒரு கவிஞனுக்கு விமர்சனம் தான் நல்ல உணவு; அதுதான் அவனுக்கு உரமூட்டும்...!

நீங்கள் இட்டுச் செல்லும் கீறல்கள் ஒவ்வொன்றும் இக்கவிதைகளுக்கான அடையாளங்கள்...!

அந்த அடையாளங்கள்தான் எனக்கான சமுதாய அங்கீகாரம்.

வீழ்ந்தும் தமிழுக்கே வித்தாவோம்...
விமலன்

Friday, March 26, 2010

டவுள் புராணம்

பிறந்தும்              தவழ்ந்தும்                 நின்றும்                 நடந்தும்
கற்றும்                 கரந்தும்                      கடந்தும்                கிடந்தும்
வளர்ந்தும்           வளைந்தும்               வதைத்தும்          வணங்கியும்
உணர்ந்தும்          உரைத்தும்                உழைத்தும்          உயர்ந்தும்
தளர்ந்தும்             தவித்தும்                  தணிந்தும்            துவன்றும்
அறிந்தும்             அழித்தும்                  ஆக்கியும்             ஆராதித்தும்
பறந்தும்                பரந்தும்                      பயின்றும்             பணித்தும்
இரைந்தும்           இயற்றியும்               ஈன்றும்                  ஈட்டியும்
ஒளிந்தும்             ஒதுங்கியும்              ஓதியும்                  ஓடியும்
மலர்ந்தும்            மணந்தும்                 முதிர்ந்தும்            மரித்தும்
கடைசியில்          எல்லாம்                   கரைந்து                 போக
ஆத்மா                  மட்டும்                      மெய்யென்று       உணர்ந்து
இறைவனை       தொழுதவன்             காலடி                    வீழ்ந்தேன்
சரணம்!                 சரணம்!                     மலரடி                   சரணம்!
சரணம்!                 சரணம்!                     அவனடி                சரணம்!
சரணம்!                 சரணம்!                     சரணம்!                 சரணம்!


வேறு

சித்தம் எல்லாம் சிவஞானம் எனப்பெற்று
நித்தம் ஒருநாளும் உனைமறவா மனம்பெற்று
பந்தம் பணமாசை எல்லாமே அறுபட்டு
பித்தன் எனவாகி நின்பாதம் சரணடைய
உந்தன் கடைக்கண்ணால் என்னை நீ நோக்காயோ!

Thursday, March 25, 2010

தாய்மொழிப் பித்தன் 

சங்கத்தமிழ் மீது மோகம் கொண்டேன் - அதை
என் நெஞ்சுக் குழிக்குள்ளே அடைத்து வைத்தேன்;
பைந்தமிழ் நூல்களின்கண்  தமிழமுதை - அள்ளிப்
பருகிடவே தினம் காத்திருந்தேன்

உண்ண உணவேதும் தேவையில்லை - நான்
உருண்டு உறங்க இடம் தேவையில்லை;
காய்ந்த இலை சருகைத் தின்றுடுவேன் - தீந்
தமிழ் நூல்களுக்குள் புதைந்திடுவேன்

பட்டம் பதவியொன்றும் தேவையில்லை - ஒரு
சொத்து சுகமெதுவும் தேவையில்லை;
பண்டக சாலைகள் எல்லாம் தேடிவந்து - இன்
இலக்கண இலக்கிய நூல் படித்திடுவேன்

கம்பன் கவித்தமிழைத் தின்றிடுவேன் - திரு
வள்ளுவன் குறள் பாவைக் குடித்திடுவேன்;
வீரத் தமிழுணர்வு வேணுமென்றால் - கவி
பாரதியின் நறுந்தமிழைச் சுவைத்திடுவேன்

வளமான வாழ்வை யான் தேடமாட்டேன் - என்
உற்றார் உறவின ரன்பை நாடமாட்டேன்;
கன்னித்தமிழ் நூல்கள் கிடைக்குமென்றால் - வன்
பாலைவனத்திலும் நான் கிடந்திடுவேன்

எட்டா உயரத்தில் கண்சிமிட்டும் - அந்த
நிலவுப் பெண்ணழகை ரசிக்கமாட்டேன்;
இந்நிலத் திளமை குன்றா தமிழன்னை - என்
அருகில் கிடக்க நான் தவமிருப்பேன்

பகையை அழிக்க நான் துணியமாட்டேன் - என்
கையில் ஆயுதங்கள்  ஏந்தமாட்டேன்;
மண்ணுக்கடியில் தமிழ் கிடைக்குமென்றால் - இந்தப்
பூமியை இரண்டாய்ப் பிளந்திடுவேன்

மெல்லத் தமிழ் இனி சாகுமென்று - இங்கு
எவனேனும் சொல்வது கேள்வியுற்றால்,
ஊமையாய் ஒருபோதும் இருக்கமாட்டேன் - அவன்
மூச்சை அப்பொழுதே நிறுத்திடுவேன்

காலன் என்னுயிர் தேடிவந்தால் - அவனைக்
காலால் எட்டியே உதைத்திடுவேன்;
இயலிசை நாடகத்தமிழ் தவிர - என்னை
வேறெதுவும் தீண்டாமல் எதிர்த்து நிற்பேன்

ஈழமண் காண ஓடிப்போவேன் - அங்கு
தமிழ்மக்கள் துயர்கண்டு கசிந்தழுவேன்;
சிங்கக் குலமென்னைக் கொல்லவந்தால் - கரும்
புலியாய் உருமாறி அதைப் புசித்திடுவேன்

தமிழின்றி ஒருபோதும் இருக்கமாட்டேன் - வேற்றார்
மொழியை நான் மதிக்கமாட்டேன்;
வீழ்ந்தும் தமிழுக்கே வித்தாவேன் - எந்தன்
சாம்பல் தமிழ் மணக்க விதிசெய்வேன்!

Wednesday, March 24, 2010

ரிச்சுவடு 

அன்பாய் இரு
ஆணவம் தவிர்

இரக்கம் காட்டு
ஈகைக்கு உடன்படு

உறக்கம் கைவிடு
ஊக்கம் கொள்

எண்ணியன செய்
ஏமாற்றம் மற

ஐயம் இழுக்கு

ஒற்றுமையாய் வாழ்
ஓயாமல் உழை

ஔடதம் புசி

அஃறினை மதி

Tuesday, March 23, 2010

லையுதிர்காலம் 

இனி இல்லை
'இலையுதிர்காலம்' !
அதுதான்...
வீடுகள் தங்கள் பசி தணிக்க
மரங்களைப் புசித்துவிட்டனவே...!

இலையுதிர்காலம் -
மரங்களின் மௌனம்!

இலையுதிர்காலம் -
மரங்களின் வேள்வி!

இலையுதிர்காலம் -
மரங்களின் கர்ப்பம்!

இலையுதிர்காலம் -
மரங்களின் நோன்பு!

இனிமேல் இவற்றையெல்லாம்
கவிதையாக...
கதையாக...
கற்பனையாக...
காவியமாக...
'காகிதங்களில்' பதிவு செய்யுங்கள் - அதற்கும்
பல மரங்களைக் கொன்று !

Monday, March 22, 2010

ரவு நேரத்துப் பூச்சிகள் 

இரவுச் சந்தையில்
விலைபேசப்படும்
அந்தி நேரத்து இரவல்கள்
'இவர்கள்'

மானத்தையும் கற்பையும்
இரவில் மட்டும்
கடன் கொடுக்கும் கயல்விழிகள்
'இவர்கள்'
ஒவோரு தடவையும்
துச்சாதனன்களால்
துகிலுரிக்கப்படும் போதும்
உள்ளத்தால் துவண்டு போகும்
பாவப்பட்ட பாவை(வி)கள்
'இவர்கள்'

ஊரின் கேலிப் பேச்சுகளும்
ஊனமான பார்வையும்
இவர்களுக்கு
'தொழிலால்' ஒட்டிக்கொண்ட
வாழ்வுச் சனியன்தான் !

இருப்பினும்,
எவருக்கும் தெரியாத
ஓன்று மட்டும்
சத்தியம் -

பல குடும்பப் பெண்களின் கற்பை
"இன்சூர்" செய்வதற்காக
இவர்கள்
தங்கள் உடலை விற்று
"பிரிமியம்" செலுத்துகிறார்கள்...!

Sunday, March 21, 2010

ள்ளுவத்தை விதைப்போம்... 

நினைக்கும் போது நல்லதையே 
நினைக்க வேண்டும்;
வினைப்பயனும் வெற்றியுடன்
நிகழ வேண்டும்;
முனைப்புடனே நினைத்த தெல்லாம்
முடிந்து விட்டால்
தனையன்றி வேறுயார்க்கு மிது
இயலா தெனலாம்.

அன்புள்ள நெஞ்சத்துடன்
பழக வேண்டும்;
பண்புள்ள மனிதனாகத்
திகழ வேண்டும்;
எண்ணங்கள் நிறை பொருளாய்
அமைந்து விட்டால்
துன்பங்கள் உனை விட்டு
மடிந்தே போகும்.

சினம் என்னும் பேயை - நீ
விரட்ட வேண்டும்;
புணரி போல் பொறுமையுடன்
வாழ வேண்டும்;
பணம் உனக்குத் தாதையை
விளங்கா திருக்க
மனமென்னும் குரங்கை - நீ
ஒறுத்தல் நன்மை.

தரித்திரமாய் கை நீட்டி
இரக்க வேண்டாம்;
நரியைப் போல் ஏமாற்றி
வாழ வேண்டாம்;
கிரியாக வையகத்தில் - நீ
உயர்ந்து நின்றால்
அரவே உன் பலங்கண்டு
நடுங்கி நிற்கும்.

மாதா பிதாவை என்றும்
போற்ற வேண்டும்;
வேத இறைவனையே தினம்
துதிக்க வேண்டும்;
பாதகச் செயல்களையும் - நீ
ஒதுக்கி விட்டால்
மாதவம் செய்த பலன்
உன்னைச் சேரும்.

கற்றவற்றை யாவர்க்கும்
கற்றல் வேண்டும்;
சொற்களோ முறையறிந்து
வருதல் வேண்டும்;
நற் தகவுள்ள மனிதனாக - நீ
வாழ்ந்து வந்தால்
பொற் காலம் உனக்கன்றி
வேறு யார்க்கு?

Saturday, March 20, 2010

ன்பதாம் திசையில்  ன்  லகம்

இளைஞனே!
உன் ஐந்து விரல்களுக்கிடையில்
உலகத்தை விதை.

வெற்றிகளை முத்தமிட
பூமிவரை உதடு திற.

ஒவ்வொரு செயலிலும்
அனுபவம் பெறு.

பூமி – வானம்
இரண்டுமே வெகுதூரம் இல்லை;
பூமியில் இருந்து வானத்தைத் தொடு.
கடலின் ஆழம் காண்;
ஆகாயத்தை அள.

மனிதர்களை அறி!
நண்பர்கள் கூட
நன்றியில்லாதவராய் இருக்கலாம்.

எவரையும் நம்பாதே
எச்சரிக்கையாய் இரு!
எப்பொழுதும் விழித்திரு!

உறக்கத்தில் கூட
கண் திறந்து இரு!
சூழ்ச்சிக்காரர்கள் உன்னை
சூழ்ந்து கொள்ளலாம்.

இதயத்தைப் பத்திரப்படுத்திக்கொள்!
‘ஹார்மோன்கள் உன்னைக்
காதலிக்கத் தூண்டலாம்;
பெண்களைக் கண்டால்
உன் இதயம்
நூறு தடவை துடிக்கலாம்;
தியான மருத்துவம் கொள்.

காதலைக் கட
காமத்தை எரி

வாழ்க்கை உன்னுடையது
வாழ்ந்து பார்!
உன் இணையை நீயே தேர்ந்தெடு
அது உன் உரிமை! - அதற்காக
உறவுகளை மிதியாதே
தாய் தந்தை எதிர்காதே

அழகைப் பார்த்து
அன்பைக் கேட்காதே!
வாலிபம் கடந்தால்
அழகு அர்த்தமற்றுவிடும்;
முதுமைப் பருவத்தில் – அழகு
தொழுநோயாய்த் தோன்றலாம்!

மனதைப் படிக்கும்
மந்திரம் தெரி.

காதலும் கற்பும் ஒன்றுதான் -
இறக்கும் வரை
துணையை நேசி;
அன்பைப் பிழிந்து
இல்லறம் செதுக்கு.

பிறருக்காக கொள்கையை விற்காதே!
இலட்சியங்களை இமயத்தில் விதை
காலம் உன் பெயர் சொல்லும்

உன் பலத்தை உணர்
உன்னில் இருக்கும்
உன்னை அறி

தன்னம்பிக்கை கொள்
பூமியைத் தூக்கி
உன் தோள்களில் நிறுத்து!
உன் நெற்றிப் பொட்டில்
சூரியனைச் சிறையிடு!

சமுதாயச் சடங்குகளை
உன் இரும்புக் கரங்களால் உடைத்தெறி;
திமிரி எழுந்து
சீக்கிரம் புறப்பட்டு வா...

உனக்காகக் காத்திருக்கிறது
ஒன்பதாம் திசை!

Friday, March 19, 2010

ரு ருவறையின் றுவடை

துப்பாக்கிச் சத்தங்களும்
போர் விமான இரைச்சல்களும்
சந்கீதமாகைவிட்ட
ஈழத்துத் தெருக்களில்
எஞ்சிக்கிடக்கின்றன-
மனித உயிர்களும்
தமிழினமும்!

இங்கே –
இரத்த நெடி
மூக்கைத் துளைக்கும்!

ஒப்பாரிச் சத்தங்கள்
காதுகளைச் செவிடாக்கும்;
வீறிட்ட சிசுக்குரல்கள்
ஒவ்வொரு வீடுகளிலும்
பழக்கப்பட்ட ஓசைகளாய்
தெருவரையும் கேட்கும்!

தாய்ப்பாலுக்குக்கும் தாயன்புக்கும்
ஏங்கியவாறே கண்ணை மூடிவிடும் – சிசுக்கள்
உறக்கத்தில்கூட ஏக்கம் கலையாமல்

உயிருக்கும் உடைமைக்கும்
இங்கே உத்தரவாதம் இல்லை
எப்பொழுது வேண்டுமென்றாலும்
உயிர்கள் பறிக்கப்படலாம்

சுடுகாடுத் தேர்கள்
ஒவ்வொரு வீடுகளையும் தேடிவரும்
தவணை முறையில்
தமிழர்களின் பிணங்களைத் தின்பதற்காக!

மரண வாயில்கள்
படுகொலைக் களமாய்
வாயைப் பிளக்கும்!

உயிர்விடும் கதைகள்
நித்தம் நடக்கும்
மனம் வெம்பி கலங்கி அழுது
அண்டை வீட்டாரிடம்
ஆறுதல் கேட்கும்
சோகச் சித்திரம்
கருவறை கிழித்துக்கொண்டு பிறக்கின்ற
ஒவ்வொரு குழந்தையின்
முகத்திலும் குத்தப்படும்!

சுதந்திரம் என்பது
கானல் நீராய்
அடிக்கடி கனவுகளைக் கலைக்கும்;
சுதந்திரமாய் தமிழ்க்காற்றை
சுவாசித்து மூச்சுவிட – இங்கு
யாருக்கும் நாதியில்லை!

நிலவின் ஒளியும்
நட்சத்திரக் கூட்டமும்தான் - இங்கே
மின்சார விளக்குகளாய்
வீடுகளைத் தேடிவரும்!

ஈழத்துச் சிறவர்சிறுமியர்
சாதிக்க நினைப்பதற்கு
இந்த இரவுகள் கூட
ஒருவகையில் நண்பர்கள்தான்!

இராணுவப் படைகள்
படுகொலைப் புதராய்
தமிழ் மங்கையரை விடாமல் துரத்தும்...
கற்பிழந்த பெண்களின் கதறல்
காடுவரை எதிரொலிக்கும்!
மனிதம் புதிய வடிவில் சாகடிக்கப்படும்!

குட்டி விமானங்களும்
ஆகாயம் தொட்டு முத்தமிடும்
போர் விமானங்களும்
ஈழத்தின் சுவடுகளைக் கிழித்தெறியும்...
கல்வீடு மன்வீடு தரைதட்டும்;
எல்லாம் தரைமட்டம் ஆகும்.

மனித உடல்கள்
புவியீர்ப்பை எதிர்த்து
வானத்தை நோக்கி மேல் பறக்கும் -
இரண்டாய்....
மூன்றாய்...
நான்காய்...
பலநூறாய்...
இரத்தமும் சதையுமாய்
வெடித்துச் சிதரும்!

நாங்கள் சாகத் துணிந்து
எதையும் சகிக்க பழகிவிட்டோம்

இன்னும் பல தமிழர்கள்
மரண வீடுகளில்
மகிழ்ச்சியாய் வாழ்ந்துகொண்டிருகிறார்கள்...
எங்கள் ஊரிலும்
புறாக்கள் பறக்கும்
என்ற நம்பிக்கையோடு!

நானும்தான்...